மொழி என்பது பாஷை அன்று; ஆணை!
வணக்கம். “குமரி முதல் வட இமயத்து ஒரு மொழி” என்னும் நடுப்பக்கக் கட்டுரையைக் கண்டேன் (தினமணி 12.07.23) தலைப்பிலேயே பொருட்திரிபு உள்ளது. அதை இறுதியிற் கூறுகின்றேன். உலகம் முழுதும் இன்றியமையாததும் அதிகம் அறியப்பட்டதும் ஆங்கில மொழியே என்பதில் ஐயம் எதுவுமில்லை. உலக மொழிகளில் மிக அதிக சொற்களைக் கொண்டதும் ஆங்கிலமே. ஆனால் ஆங்கிலேயர் “எங்கள் மொழிதான் உலகிலேயே பெரிய மொழி!” என்று பெருமையடித்துக்கொள்வதை எங்கும் நாம் காண்பதில்லை. தமிழரிடையே மட்டுந்தான் இந்த நான்தான் பெரியவன் என்று பெருமையடித்துக்கொள்ளும் “பண்பு” புரையோடிக் கிடக்கின்றது. இதன் அடிப்படை நம் தாழ்வு மனப்பான்மை என்பதா? அந்தப் போக்கில் எழுந்ததாகவே இக்கட்டுரை காண்கின்றது. கட்டுரையிற் பல கருத்துகளும் தடைகூறத்தக்கனவாகவே உள. சிலவற்றை மட்டுமே இங்குக் கூறுகின்றேன். “தமிழர் இந்தியா முழுதும் பரவியிருந்தனர். பிறகு அவர்கள் தென்னிந்தியாவுக்குத் தள்ளப்பட்டனர்” என்கின்றார் கட்டுரையாளர். யார் தள்ளினார்கள்? அவ்வாறாயின் அங்கெல்லாம் தமிழர் வாழ்ந்ததாக வரலாறோ எச்சங்களோ பிற தொன்மங்களோ ஏனில்லை? தென்னகத்தில் பரவலாகக் காணப்படும் கல்வெட்டுகள் எதுவுமே ...